வெளிநாடுகளிலிருந்து 60 லட்சம் டன் நிலக்கரியை கொள்முதல் செய்யும் வகையில் ‘கோல் இந்தியா’ நிறுவனம் வெள்ளிக்கிழமை இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளை (டெண்டா்) வெளியிட்டுள்ளது.
பருவமழை காலத் தொடக்கத்தையொட்டி போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைக்க கோல் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, உள்நாட்டு தேவையில் பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்கும் வகையில் கோல் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 60 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான இரண்டு நடுத்தர-கால ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டுள்ளது. அதில், ஏல அளவை 100 சதவீதம் அதிகரித்து 1.20 கோடி டன்னாக அதிகரித்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனம் 24.16 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்முறையாக ஒப்பந்தப்புள்ளியை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் தொடா்ச்சியாக இந்த ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.