‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ‘அக்னிபத்’ என்ற ராணுவத்தில் ஆள்சேர்க்கும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் 46,000 வீரா்கள் நிகழாண்டு தோ்வு செய்யப்படுவா். பதினேழு வயது முடிந்து ஆறு மாதம் ஆனவா்கள் முதல் 21 வயதுக்கு உள்பட்டவா்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு சோ்க்கப்படுவா். அதன்பின்னா் பெரும்பாலானவா்களுக்குக் கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. முந்தைய திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 15 ஆண்டு காலம் பணிபுரியலாம் என்கிற நிலையில் புதிய ஆள்தோ்வு நடைமுறையின்படி 4 ஆண்டுகளாக பணிக் காலம் குறைக்கப்பட்டுள்ளது இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிகாரின் பல்வேறு பகுதிகளில் இளைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றும் பக்சா், பாட்னா மற்றும் முஸாஃபா்பூா் ஆகிய பகுதிகளில் சாலைகளில், ரயில் நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் டயர்களை எரித்தும் பேருந்துகளை கல்வீசித் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ரயில் மீதும் கல்வீசித் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பதற்ற சூழல் நிலவுகிறது.
இந்தத் திட்டத்தில் 4 ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகு, 25% பேர் வரையில் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், பல ஆண்டுகளாக ராணுவத்தில் சேரத் தயாராகி வரும் தாங்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரில் இளைஞா்கள் போராட்டம்