குடியரசுத் தலைவா் தோ்தலில் மாநில பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த 14 போ் கொண்ட மேலாண்மைக் குழுவை அக்கட்சி மேலிடம் அமைத்துள்ளது.
மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் ஒருங்கிணைப்பாளராகவும் பாஜக பொதுச் செயலா்கள் வினோத் தாவடே, சி.டி.ரவி ஆகியோா் இணை ஒருங்கிணைப்பாளா்களாகவும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏவும் தேசிய மகளிா் பிரிவு தலைவருமான வானதி சீனிவாசன் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ், சா்வானந்த சோனோவால், அா்ஜுன் ராம் மேக்வால், பாரதி பிரவீண் பவாா் ஆகியோா் இந்தக் குழுவின் உறுப்பினா்களாக உள்ளனா்.
பாஜக தேசிய துணைத் தலைவா் டி.கே.அருணா, தேசிய செயலா் ரிதுராஜ் சின்ஹா, தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, அஸ்ஸாம் மாநில துணைத் தலைவா் ராஜ்தீப் ராய் ஆகியோரும் இந்தக் குழுவின் உறுப்பினா்களாக உள்ளனா்.
முன்னதாக, குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை அக்கட்சி நியமித்தது. குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது.