மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர் தூதுவராகச் சென்று ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்திருப்பது சிவசேனைக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை மூத்த தலைவரும் அதிருப்தி எம்எல்ஏ-வுமான ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்களை கொண்டு கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளார். கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என ஷிண்டே தரப்பு கூற, நேரில் வந்து ஆலோசனை நடத்தினால் கூட்டணியிலிருந்து விலகத் தயார் என உத்தவ் தரப்பு கூறி வருகிறது. இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இளைஞர்களின் கனவை பாஜக உடைத்துவிட்டது: ராகுல் காந்தி
ஏக்நாத் ஷிண்டே அணியில் 42 மகாராஷ்டிர எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதுவே உத்தவ் தாக்கரேவிடம் வெறும் 13 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ரவீந்திர ஃபதக் என்பவர் தூதுவராக ஷிண்டேவின் அணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். தூதுவராகச் சென்ற ஃபதக் தற்போது ஷிண்டே அணியில் இணைந்துவிட்டார். ஃபதக் சட்டமேலவை உறுப்பினர். இவரும் அணி மாறியிருப்பது சிவசேனைக்குப் பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது.