முகப்பு
இந்தியா

போராடும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் மோடி கைதேர்ந்தவர்: ராகுல் காந்தி விமர்சனம்

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை அடுத்த விஷயத்துக்கு திசை திருப்புவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் பிரதமர் மோடி

Updated On : 5 ஜூலை 2022, 5:21 pm IST
பகிர்:

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை அடுத்த விஷயத்துக்கு திசை திருப்புவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது. இது ராகுல் காந்தியின் மீதான மத்திய அரசின் நேரடித் தாக்குதல் என விமர்சனம் எழுந்தது. மேலும் அமலாக்கத்துறையை கண்டித்த நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து. பல மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. 

Advertisement

Advertisement

இது பாஜகவை கடும் நெருக்கடியில் தள்ளியது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வரும் நிலையில், ஒரு பிரச்னையை மறைக்க பாஜக மற்றொரு பிரச்னையை கையில் எடுப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வேலையில் பிரதமர் மோடி கைதேர்ந்தவராக இருக்கிறார். இருந்தாலும் அவரால், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, பணவீக்கம், எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் போன்ற பேரழிவுகள் போன்ற மத்திய அரசின் சொதப்பல்களை மறைக்க முடியாது. 

டி.எச்.எப்.எல். போன்ற மிகப்பெரிய வங்கி மோசடி பேரழிவுகளை மறைக்க முடியாது. 

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அடுத்த விஷயத்துக்கு பிரதமர் மோடி மும்முரமாக திட்டமிடுகிறார் என்று கூறியுள்ளார். 

ராகுலின் இந்த பதிவு இந்திய அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.