முகப்பு
இந்தியா

உக்ரைனைவிட்டு இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்

உக்ரைனைவிட்டு இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

உக்ரைனைவிட்டு இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் இன்று மூடப்பட்ட நிலையில், கார்கிவ் நகரைவிட்டு அனைத்து இந்தியர்களும் மாலை 6 மணிக்குள்(இந்திய நேரடிப்படி இரவு 9.30 மணி) நடந்தாவது வெளியேறுங்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையே, தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

உக்ரைனைவிட்டு வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தூதரகத்தின் அறிவுறுத்தலுக்கு பின்பு, ஏறத்தாழ 17,000 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர்.

அடுத்த 24 மணிநேரத்தில் 15 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், சில விமானங்கள் பயணத்தை தொடங்கிவிட்டன. கடந்த 24 மணிநேரத்தில் 6 விமானங்களும் மொத்தம் 15 விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இதில், 3,352 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய விமானப்படையின் சி-17 விமானமும் மீட்புப் பணியில் இணைந்துள்ளன. ரோமானியாவிலிருந்து முதல் விமானம் இன்று நள்ளிரவு தில்லி வரவுள்ளன. மேலும், 3 விமானங்கள் இன்று கிளம்பவுள்ளன.

கார்கிவ்விலிருந்து நேற்று இரவு, இன்று காலை சில மாணவர்கள் ரயில்கள் மூலம் வெளியேறியுள்ளனர். கார்கிவ் மற்றும் பிற நகரங்களிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பாக ரஷியாவிடம் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைனில் இன்று உயிரிழந்த சந்தல் ஜிண்டால், இயற்கையாக உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினரும் உக்ரைனில் தான் இருக்கின்றனர்.

கார்கிவ்விலிருந்து இந்தியர்களை வெளியேற்றுமாறு ரஷியத் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்திய தூதரகம் உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.

பாஸ்போர்டை தவறவிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பல இந்தியர்கள் பயன்பெறுவர்.

பிற நாடுகள் உதவிகள் கேட்டால், அவர்களுக்கும் கண்டிப்பாக உதவ தயாராக இருக்கின்றோம். கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க குழுக்களை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments