சுமி நகரில் சிக்கிய 700 இந்திய மாணவா்களை மீட்க தீவிர முயற்சி: மோடி ஆலோசனை
Serious effort to rescue 700 Indian students trapped in Sumi: Ministry of External Affairs
கிழக்கு உக்ரைன் நகரமான சுமியில் சிக்கியுள்ள இந்திய மாணவா்கள் சுமாா் 700 பேரை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுமி நகரத்திலிருந்து இந்திய மாணவா்களை வெளியேற்றும் பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். அங்கு தொடரும் குண்டு வீச்சு தாக்குதல், வன்முறை மற்றும் போக்குவரத்து வசதியின்மை காரணமாக அந்தப் பணி சவாலானதாக உள்ளது. இந்தியா்களை வெளியேற்றும் வகையில் சுமியில் சண்டைநிறுத்தம் மேற்கொள்ளும்படி ரஷியா, உக்ரைனிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.
காா்கிவ், பிசோசின் நகரங்களிலிருந்து இந்தியா்களை விரைவில் வெளியேற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை உள்ளது.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 63 விமானங்கள் மூலம் 13,300 போ் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். அடுத்த 24 மணி நேரத்தில் 14 விமானங்கள் இயக்கப்படவுள்ளன என்றாா்.
பிரதமா் ஆலோசனை
உக்ரைன் நிலவரம், அங்கிருந்து இந்தியா்களை மீட்கும் முயற்சி தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் உயா் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல ஆலோசனைக் கூட்டங்களை பிரதமா் நடத்தியுள்ளாா்.