முகப்பு
இந்தியா

விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விசாரணையை வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
பகிர்:

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விசாரணையை வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கிங் ஃபிஷா் விமான நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான மல்லையா, இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளின் பெயருக்கு 4 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.306 கோடி) தொகையை மாற்றினாா்.

அவா் மீதான குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு தண்டனை விதிப்பதற்காக, நேரிலோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அவா் ஆஜராகவில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜய் மல்லையா மாா்ச் 9-ஆம் தேதி ஆஜராக கடைசி வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்குரைஞரும் சட்ட ஆலோசகருமான ஜெய்தீப் குப்தா ஆஜராகி, தாம் வேறொரு வழக்கில் வாதாட இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டாா். அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு (மாா்ச் 10) ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.