ராஜிநாமா செய்த பிரமோத் சாவந்த்...கோவாவின் அடுத்த முதல்வர் யார்?
கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவிவருகிறது.
கோவாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக ஆயத்தமாகி வரும் நிலையில், முதல்வர் பொறுப்பை பிரமோத் சாவந்த் ராஜிநாமா செய்துள்ளார். வெளியான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின்படி 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பாஜக 20 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரவாதி கோமந்தாக் கட்சியும் மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரமோத் சாவந்த் ட்விட்டர் பக்கத்தில், "கோவா மக்களின் ஆசியுடன், கடைசி மனிதரும் உயர வேண்டும் என்ற கொள்கையில் செயல்படும் பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இரட்டை எஞ்சின் அரசு மூலம் கோவா தொடர்ந்து முன்னேறும்" என பதிவிட்டுள்ளார்.
கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவிவருகிறது. பாரம்பரியமிக்க சங்கேலிம் தொகுதியில் 666 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரமோத் சாவந்துக்கு பதில் வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டுவருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பிரமோத் கூறுகையில், "நான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் நாங்கள் (பாஜக) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளோம். இது ஒரு பெரிய விஷயம். மாநிலம் வாரியாக பிரசாரம் செய்தும் எனது சொந்த தொகுதிக்கு செல்ல முடியாததால் எனக்கு இது மிகவும் சவாலாக இருந்தது. என் தொண்டர்களே எனக்காக பிரசாரம் செய்தனர்" என்றார்.
இதையும் படிக்க | கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவிவருகிறது.
அடுத்த முதல்வராக சாவந்த் தொடர்வாரா என சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானேவிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எனக்குத் தெரியாது, இது ஒரு உணர்ச்சிகரமான கேள்வி. இதற்கான விடை அளிப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லை" என்றார்.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தனித்தும், கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. மகாராஷ்டிரவாதி கோமந்தாக் கட்சியுடன் திரிணாமூல் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.