பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலன் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல திட்டங்களை பழங்குடியினர் அமைச்சகம் அமல்படுத்துகிறது.
பழங்குடியினர் நலனுக்கு கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.37,802.94 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.51,283.53 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.52,024.23 கோடியும் ஒதுக்கப்பட்டதாகக் கூறினார்.
பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துடன், 40 மத்திய அமைச்சகங்கள், துறைகள் தங்களின் மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 4.3 முதல் 17.5 சதவிகிதத்தை பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்குகின்றன.
இந்தத் திட்டங்களின் கீழ் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்ப்பாசனம், சாலைகள், வீடுகள், குடிநீர், மின்சார வசதி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நாட்டில் உள்ள பழங்குடியினர் சமூக பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.