கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் தீவு நாடான இலங்கைக்கு இந்தியா சார்பில் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த புதிய அறிவிப்பினை இலங்கைக்கான இந்திய உயர்மட்ட குழு அதன் ட்விட்டர் கணக்கின் மூலம் அறிவித்துள்ளது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “ இந்தியா சார்பில் 12 கப்பல்களில் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருட்கள் அனுப்பப்பட உள்ளது.” என பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தியா சார்பில் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்கப்பட்டது.
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்மட்ட குழு தலைவர் மிலிண்டா மோரகோடா இந்தியாவின் உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியிடம், இலங்கையில் விவசாயத்திற்கு உரங்கள் தேவைப்படும் சூழலில் இந்தியா 65,000 மெட்ரிக் டன் யூரியா உரங்களை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல, இந்தியா சார்பில் பொருளாதார நெருக்கடியில் திணறி வரும் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இது போன்ற மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்ததில்லை. இலங்கையில் உணவு மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டில் அதிக நேரம் மின்வெட்டு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.