கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 2300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை 7 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்தானது வினாடிக்கு 2,300 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது.
தென்பெண்ணை ஆற்றில் 2300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணையின் பிரதான கால்வாய் பாசன கால்வாய் உள்பட தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், தர்மபுரி, திருவண்ணாமலை , விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.