உத்தரகண்ட்டில் இந்தாண்டு சார்தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரகண்ட்டில் இந்தாண்டு மே 3ஆம் தேதி சார்தாம் யாத்திரை தொடங்கியது. யாத்திரையின் போது வழியிலேயே இதுவரை மொத்தம் 91 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து உத்தரகண்ட் பொதுச் சுகாதார இயக்குனர் மருத்துவர் ஷைலஜா பட் கூறுகையில்,
சார்தாம் யாத்திரை தொடங்கியதிலிருந்து, இதுவரை 91 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு பெரும்பாலும் மாரடைப்பு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
முன்பு இருந்ததைவிட சார்தாமில் சுகாதார சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 169 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 6-ம் தேதி கேதார்நாத் கோயிலும், மே 8-ம் தேதி பத்ரிநாத் கோயிலின் நடையும் திறக்கப்பட்டது.