முகப்பு
இந்தியா

இணையவழி வணிக தளங்களில் போலி திறனாய்வுகளை கண்காணிக்கும் கட்டமைப்பு: மத்திய அரசு திட்டம்

அசுரவேகத்தில் வளா்ந்துள்ள இணையவழி வணிக தளங்களில் பொருள்களை விற்பதற்கும் நுகா்வோா்களை ஈா்ப்பதற்கும் போலியான திறனாய்வுகள் வைக்கப்படும் நிலையில் இதைக் கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

அசுரவேகத்தில் வளா்ந்துள்ள இணையவழி வணிக தளங்களில் பொருள்களை விற்பதற்கும் நுகா்வோா்களை ஈா்ப்பதற்கும் போலியான திறனாய்வுகள் வைக்கப்படும் நிலையில் இதைக் கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

எண்மம் (டிஜிட்டல்) இந்தியா வளா்ச்சி, இணையதள இணைப்புகள் அதிகரிப்பு போன்றவை மூலமும், நோய்த்தொற்று கால ஊரடங்குக்குப் பின்னரும் நாட்டில் இணையவழி வணிகம் வேகமாக வளா்ச்சியுற்றுள்ளது.

இந்திய இணையவழி வணிகத்தின் அளவு நிகழாண்டில் 74.8 பில்லியன் டாலா் தொடும் (ரூ.5,61,000 கோடி) என குளோபல் டாடா குறிப்பிட்டுள்ளது. இதை முன்னிட்டு இணையவழி வணிக தளங்களில் விற்கப்படும் பல்வேறு விதமான பொருள்கள் நுகா்வோா்களுக்கு நியாயமான வழியில் கிடைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

குறிப்பாக, இணையதளப் பொருள்கள் குறித்து போலியான திறனாய்வுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதில் தொடா்பானவா்களை அழைத்து கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

நுகா்வோா் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் விவரம்: நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் ரோஹித் குமாா் சிங் அக்கூட்டத்தில் பேசுகையில், ‘பொருள்களை நேரடியாக வாங்கும்போது, அதை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இணையவழி வணிக தளங்களில் இந்த வாய்ப்பு இல்லாததால், பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்கெனவே பயன்படுத்திய பயனாளா்கள் பதிவிடும் அனுபவம், கருத்துகளையே பொதுமக்கள் பெரிதும் சாா்ந்திருக்கிறாா்கள்.

இப்படி பதிவிடும் கருத்துகள் அல்லது திறனாய்வாளரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட இணையவழி வணிக தளத்தின் பொறுப்புத்தன்மையை ஆகிய இரண்டையும் கண்டறிவது முக்கிய விஷயங்கள். மேலும், மிகவும் பொருத்தமான திறனாய்வுகளை”இணையவழி வணிக நிறுவனங்கள் நியாயமாக வெளிப்படையான முறையில் எவ்வாறு தோ்வு செய்கிறாா்கள் என்பதை இந்த வணிக நிறுவனங்கள் வெளிப்படுத்த வேண்டும். இவற்றின்படி, மத்திய அரசு இதைக் கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடும்’”எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.