சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், பக்தா்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்காக கேரள அரசு சார்பிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்லவும், தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இந்நிலையில் சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018ல் உத்தரவிட்டது. இந்த தீா்ப்பை கேரள அரசு அமல்படுத்த முயன்றபோது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அதேநேரத்தில் பெண்களின் உரிமையை மறுக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மண்டல விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலைக்கு பெண்கள் வரும்பட்சத்தில் காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.