ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், மருத்துவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் பலியாகினர்.
மருத்துவமனைக்குள் தீ விபத்து நேரிட்டதும், நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவரும், தனது குடும்பத்துடன் அதேக் கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த நிலையில், அவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ் குமார் கூறுகையில், புதன்கிழமை காலை 5.30 மணிக்கு நாரிபுரா பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைக் கட்டடத்தின் முதல் தளத்திலிருந்து கரும்புகை வந்து தீ மளமளவென கட்டடம் முழுக்கப் பரவியது.
மருத்துவமனை கீழ் தளத்திலும், அதன் உரிமையாளர் குடும்பத்துடன் முதல் தளத்திலும் வசித்து வந்தார். இந்த தீ விபத்தில் மூன்று பேர் பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் ராஜன் (45), அவரது மகள் ஷாலு (17), மகன் ரிஷி (14) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது அடையாளம் இதுவரை தெரியவரவில்லை.