உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண், இணைய வழியில் பொருள்களை வாங்கி ஏமாற்றத்திற்குள்ளான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் கைக்கடிகாரம் முன்பதிவு செய்த நிலையில், அவருக்கு சாண வறட்டி பார்சலாக அனுப்பப்பட்டுள்ளது.
இணைய வழியில் பொருள்களை வாங்கும்போது அதில் பல குளறுபடிகள் ஏற்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஏமாற்றப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பிக்பில்லியன் எனப்படும் அதிரடி விற்பனை தொடங்கப்பட்டது. இதில் பல பொருள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்தவகையில், உத்தரப் பிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.1,300க்கு கைக்கடிகாரம் வாங்கியுள்ளார்.
அக்டோபர் 7ஆம் தேதி வீட்டிற்கு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை இளம்பெண்ணின் சகோதரர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். பார்சலை திறந்து பார்த்தபோது அதிக் கைக்கடிகாரத்திற்கு பதில், மாட்டு சாண வறட்டி இருந்ததைக் கண்டு இளம் பெண்ணும், சகோதரரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இணையவழி விற்பனையில் உரிய பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்படுவதில்லை. பலமுறை புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் ட்ரோன் ஆர்டர் செய்திருந்த இளைஞருக்கு உருளைக்கிழங்கு டெலிவரி செய்யப்பட்டது. லேப்டாப்க்கு பதிலாக செங்கற்கள் டெலிவரியான செய்தியும் பலர் அறிந்தவைதான்.
பண்டிகை காலத்தையொட்டி இணையதள நிறுவனங்கள் அறிவிக்கும் தள்ளுபடிகளால் இணையவழியில் பொருள்களை ஆர்டர் செய்வது குறைந்தபாடில்லை என்பதுதான் எதார்த்தமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.