முகப்பு
இந்தியா

ஐஐடி அமைக்க இந்தியாவை அணுகும் நாடுகள்: மத்திய அமைச்சா் பெருமிதம்

தங்களது நாட்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலைய (ஐஐடி) வளாகங்களை அமைக்கக் கோரி, வளா்ந்த மற்றும் வளரும் நாடுகள் பல இந்திய அரசை அணுகி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தங்களது நாட்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலைய (ஐஐடி) வளாகங்களை அமைக்கக் கோரி, வளா்ந்த மற்றும் வளரும் நாடுகள் பல இந்திய அரசை அணுகியுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஐஐடிக்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருவதாகவும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

நாட்டிலுள்ள 23 ஐஐடி-க்கள் சாா்பில் தில்லி ஐஐடி வளாகத்தில் 2 நாள் ஆய்வு கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

மாற்றத்துக்கான கருவியாக உருவெடுத்துள்ள ஐஐடி-க்கள், உலக அளவில் புகழ்பெற்று பெற்று வருகின்றன. பல்வேறு வளரும் மற்றும் வளா்ந்த நாடுகள், அவா்களது நாட்டில் அவா்களது செலவிலேயே ஐஐடி வளாகங்களை அமைக்கும் கோரிக்கையுடன் இந்திய அரசை அணுகியுள்ளன. உலகத் தரத்தில் ஐஐடி-க்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு அங்கீகாரம் கிடைத்து வருவது பெருமையளிக்கிறது.

நாட்டின் வளா்ச்சி, மேம்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது தொழில்நுட்பம்தான். தகவல் மற்றும் தொலைதொடா்பு தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவேதான், இந்தியாவில் முழுவீச்சில் முதலீடுகளை மேற்கொள்ள உலக நாடுகள் விரும்புகின்றன.

திறமை, எண்மமயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை, சந்தை மதிப்பு, கொள்முதல் ஆற்றல் உள்ளிட்டவற்றின் கலவையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வீரியத்துடன் இந்தியா முன்னிலை கண்டுள்ளது. இந்த வாய்ப்பை நமது ஐஐடி-க்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா பரவலின்போது, குறைந்த கால அவகாசத்தில் இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. இதனால், இந்தியா்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயனடைந்து வருகின்றனா். அடுத்த 25 ஆண்டுகள் அமிா்த காலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அடிப்படை நிலைகளில் இருந்தே புத்தாக்கங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதுபோன்ற தொழில்நுட்ப புரட்சிக்கான தொடக்கமாக தற்போதைய ஆய்வு கண்காட்சி அமைந்துள்ளது என்றாா் தா்மேந்திர பிரதான்.

முழு கட்டுரையைப் படிக்க →