பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் நகரின் சில பகுதிகளில் வெள்ள நீர் , குளம் போல் தேங்கியுள்ளது. நகரில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்ததில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
முன்னதாக, செப்டம்பர் 7ல் கனமழை பெய்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, நகரத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து பெரும்பாலான பகுதிகளைப் பாதித்தது.
சேஷாஸ்த்ரிபுரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மெட்ரோ ரயிலின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 7 கார்கள் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சுவர் இடிந்து விழுந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தரக்குறைவான வேலையால் சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறி, தங்களது வாகனங்களின் இழப்புக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கார் உரிமையாளர் கோரி வருகின்றனர்.
சிவாஜி நகரில் வெள்ள நீர் சூழ்ந்து ஆறு போல காட்சியளித்தது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
அடுத்த 24 மணி நேரத்தில் சில நேரத்தில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.