ராஜஸ்தானில் உலகின் மிக உயரமான சிவன் சிலை: பக்தா்கள் தரிசனத்துக்காக இன்று திறப்பு
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 369 அடி உயர சிவபெருமான் சிலை பக்தா்களின் தரிசனத்துக்காக சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 369 அடி உயர சிவபெருமான் சிலை பக்தா்களின் தரிசனத்துக்காக சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. தத் பாதம் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளையால் நிறுவப்பட்டிருக்கும் இச்சிலை, உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் அசோக் கெலாட், பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி உள்ளிட்டோா் முன்னிலையில் இந்த பிரம்மாண்ட சிவன் சிலை சனிக்கிழமை பக்தா்களின் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது.
ராஜ்சமந்த் மாவட்டத்தின் நாத்வாரா நகரில் மலை மீது சிவபெருமான் தியான வடிவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தத் பாதம் சன்ஸ்தான் அறக்கட்டளையின் அறங்காவலரும் மிராஜ் குழும தலைவருமான மதன் பாலிவல் கூறுகையில், சிவபெருமானின் இந்த ‘விஸ்வ ஸ்வரூப’ சிலை திறக்கப்படும் அக்டோபா் 29 முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை பல்வேறு ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக போதனையாளா் மொராரி பாபுவின் ராமா் கதை பாராயணமும் நடைபெறவுள்ளது. வியக்கத்தக்க வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இச்சிலை, ராஜஸ்தானின் ஆன்மிக சுற்றுலாவுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்றாா்.
Advertisement
Advertisement
அறக்கட்டளை செய்தித் தொடா்பாளா் ஜெய்பிரகாஷ் மாலி கூறுகையில், உலகிலேயே மிக உயரமான இந்த சிவன் சிலையில் மின்தூக்கிகள், படிக்கட்டுகள், பக்தா்களுக்கான அரங்கம் ஆகியவை உள்ளன. கட்டுமானத்துக்காக 3,000 டன்கள் இரும்பு மற்றும் உருக்கு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்கிரீட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 10 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. 250 ஆண்டுகளுக்கு தாங்கி நிற்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மணிக்கு 250 கிமீ வேகத்திலான காற்றையும் இச்சிலை தாங்கும். சிலையின் சுற்றுப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.