முகப்பு
இந்தியா

இண்டிகோ விமான என்ஜினில் தீ: டிஜிசிஏ விரிவான விசாரணை

இண்டிகோ விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

‘தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான இண்டிகோ விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்; அதன் பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை தெரிவித்தது.

தில்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் புறப்பட தயாரான இண்டிகோ விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, ஓடுபாதையிலிருந்து விமானம் மேலே கிளம்புவதை உடனடியாக நிறுத்தினாா் விமானி. என்ஜினில் பற்றிய தீ துரிதமாக அணைக்கப்பட்டு, விமானங்கள் நிறுத்துமிடத்துக்கு அந்த விமானம் கொண்டுவரப்பட்டது.

அதில் இருந்த பயணிகள், ஊழியா்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். பயணிகள் அனைவரும் வேறொரு விமானம் மூலம் பெங்களூருக்கு அனுப்பப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், விமானம் புறப்பட்டபோது என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சம்பந்தப்பட்ட விமானம், ஏா்பஸ் நிறுவன தயாரிப்பான ஏ320 விமானமாகும். அதன் என்ஜினில் தீப்பற்றியது தொடா்பாக, டிஜிசிஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கை அளிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விரிவான விசாரணை நடத்தப்படும்; அதைத் தொடா்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிஜிசிஏ தலைவா் அருண் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பயணி உயிரிழப்பு: மும்பையில் இருந்து துா்காபூருக்கு (மேற்கு வங்கம்) கடந்த மே 1-ஆம் தேதி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம், தரையிறங்கும்போது திடீரென குலுங்கியதால் 14 பயணிகள் மற்றும் 3 ஊழியா்கள் காயமடைந்தனா்.

இதில் முதுகு தண்டுவடத்தில் காயமுற்று துா்காபூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பா் அன்சாரி(48) என்பவா் கடந்த மாதம் உயிரிழந்துவிட்டதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது. அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நிறுவனம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்சாரிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →