இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பூடானால் வாங்கப்பட்ட பயன்பாட்டு வாகனங்களை இந்திய ரயில்வே பல முறை போக்குவரத்துகளைப் பயன்படுத்தி, இன்று அந்நாட்டிடம் ஒப்படைத்துள்ளது.
இந்திய ரயில்வே, முதல் முறையாக இதுபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துகளைப் பயன்படுத்தி, பூடானுக்கு வாகனங்களை எடுத்துச் சென்று வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு, பூடான் நாடு வாங்கிய 75 பயன்பாட்டு வாகனங்களை, சரக்கு ரயில் மூலம், சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹஸிமரா ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. பிறகு, அது சாலைமார்கமாக சனிக்கிழமை காலை பூடானுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதாவது சரக்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து என பல வழித்தடங்களைப் பயன்படுத்தி சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய ரயில்வே முதல் முறையாக மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூடானுடனான வணிக உறவை மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ஹஸிமரா ரயில் நிலையத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்தவிருப்பதாகவும் சரக்குகளை வைக்க கிடங்குகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.