ஜல்னா (மஹா): பயணிகள் ரயில்கள் சேவையால் ரயில்வேக்கு வருவாயில் எந்த பயனும் இல்லை, மேலும் மக்களின் வசதிக்காக மத்திய அரசு இந்த சேவைகளை இயக்குகிறது என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
ஜல்னாவிலிருந்து சாப்ரா சந்திப்புக்கு (பிகார்) வாராந்திர சிறப்பு ரயிலை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அப்போது, "நாள்தோறும் பயணிகள் ரயில்களை இயக்குவதன் மூலம் ரயில்வேக்கு எந்த லாபமும் இல்லை. செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், 55 பைசா இழப்பு என்ற அளவில்தான் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு லாப நோக்கத்திற்காக செயல்படவில்லை. மக்களின் நலனுக்காக, வசதிக்காக இந்த சேவைகளை இயக்க வேண்டும் என்று கூறுகிறார்,” என்று கூறினார்.
மேலும், சரக்கு சேவைகளை இயக்குவதன் மூலமும், பிற வருவாய் ஆதாரங்கள் மூலமாகவும் பயணிகள் ரயில்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தேசிய போக்குவரத்துக் கழகம் முயற்சிக்கிறது" என்று அமைச்சர் கூறினார்.
இதையும் படிக்க | ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளலாம்: எம்.பி ஜோதிமணி ட்வீட்
ஜல்னா மற்றும் சாப்ரா இடையே கந்த்வா, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி வழியாக ரயில் இணைப்பு என்பது மராத்வாடா பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு என்று தன்வே கூறினார்.
வாராந்திர சிறப்பு ஜல்னா-சாப்ரா ரயிலின் தொடக்க சேவையில் 96 சதவீத பயணிகள் வருகை உள்ளது, இது மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த ரயில் வாராந்திர சேவையாக இயக்கப்படுகிறது, ஆனால் பயணிகளின் வருகை மற்றும் தேவைகளைப் பொறுத்து, அதன் சேவை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என்றார்.
மேலும், ஜல்னா மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் மேலும் ஒரு சிறப்பு ரயில் அக்டோபர் 29 ஆம் தேதி இயக்கப்படும் என்று தன்வே கூறினார்.