திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று கேரளத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
கொச்சியில் நடைபெற்ற விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் கடற்படைக்கான புதிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி என பிரதமருடன் படு பிசியாக அரசு விழாவில் பங்கேற்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று தனது திருமண நாளை மறக்கவில்லை.
பினராயி விஜயன் இன்று தனது 43வது திருமண நாளைக் கொண்டாடி வரும் நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது மனைவி கமலாவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரே பகிர்ந்துள்ளார்.
வியாழக்கிழமை முதல் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று, நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் முன்னிருந்து கவனித்து வரும் முதல்வர் பினராயி விஜயன், தனது திருமண நாளில், அவரே கைப்பட புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது பலரது வாழ்த்துகளையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது.
1979ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் பினராயி விஜயன் ஆசிரியராக இருந்த கமலாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது பினராயி விஜயன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் வங்கியில் பணியாற்றி வருகிறார். மகள் வீணா, அண்மையில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் பி.ஏ. மொஹம்மது ரியாஸை திருமணம் செய்து கொண்டார்.
கேரளத்தில் பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும், கொச்சியிலிருந்து பினராயி விஜயன் திருவனந்தபுரம் திரும்பினார்.