2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்த சந்திப்பானது 45 நிமிடங்கள் நீண்டது.
இதையும் படிக்க | நாளை (செப்.15) வெளியாகிறது 'நானே வருவேன்' டீசர்
எனினும் இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை எனவும் வழக்கமான சந்திப்பு மட்டுமே எனவும் நிதீஷ் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நிதீஷ் குமாரை பிரசாந்த் கிஷோர் விமர்சித்துவரும் நிலையில் தற்போதைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளிவரும் நிலையில் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது.