முகப்பு
இந்தியா

கல்லூரி மாணவர்களின் அடிதடிக்குள் புகுந்த கார்: அதன்பிறகு நடந்ததுதான் வேடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அடிதடியில் ஈடுபட்ட விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Updated On : 22 செப்டம்பர், 2022 at 5:35 PM
கல்லூரி மாணவர்களின் அடிதடிக்குள் புகுந்த கார்: அதன்பிறகு நடந்தது தான் வேடிக்கை
பகிர்:


உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அடிதடியில் ஈடுபட்ட விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மசூரியில் உள்ள தங்களது பொறியியல் கல்லூரிக்கு வெளியே, தேசிய நெடுஞ்சாலை 9ல், இருவேறு அணியைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கல்லூரிக்குள் நடந்த மோதலில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் தப்பி வெளியே ஓடி வந்தபோது, அவர்களை துரத்திக் கொண்டு ஓடி வந்த மாணவர்கள் சாலைக்கு நடுவிலேயே அவர்களைப் பிடித்து அடிக்க, அப்போது இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று மாணவர்கள் மீது கடுமையாக மோதியது. அதில் ஒரு மாணவர் காரின் மீது ஏறி தூக்கி வீசப்படுகிறார்.

இதனால், அந்தக் காரை ஓட்டி வந்தவர் வேண்டுமானால் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அந்த மாணவருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையடைந்திருக்கலாம். ஆனால், விழுந்து எழுந்தவரும், அவரைத் துரத்தி வந்தவர்களும் காரையோ அது இடித்ததையோ சட்டையே செய்து கொள்ளவில்லை. 

காரில் அடிபட்டு விழுந்து எந்த மாணவரைப் பிடித்து இரண்டு மாணவர்கள் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதனைப் பார்த்த கார் ஓட்டுநர், வேகமாக காரை திருப்பிக் கொண்டு வேறு திசையில் பயணிக்கிறார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆறு மாணவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள். பலர் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இன்னும் அச்சம் கலையாமல் நடந்ததை மீண்டும் மீண்டும் அருகிலிருப்பவர்களிடம் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.