‘பாஜகவிடம் இருந்து அதன் கூட்டணிக் கட்சிகள் வேகமாக வெளியேறி வருகின்றன; தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இப்போது எங்கே உள்ளது’ என்பதுதான் கேள்வியாக உள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.
முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய தேசிய லோக் தளம் கட்சி சாா்பில் ஹரியாணாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு தலைவா்கள் பங்கேற்றனா். எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடைபெற்றது.
இதில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:
நாட்டிலேயே மிகவும் அதிகமாக, மிகப்பெரிய பொய்களைக் கூறும் கட்சியாக பாஜக உள்ளது. தோ்தலின்போது பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் அளித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. முக்கியமாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடா்பாக பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால், இப்போது முற்றிலும் தொழிலாளா்கள் விரோதப் போக்கை கையிலெடுத்துள்ள பாஜக, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவில் இருந்து அதன் கூட்டணிக் கட்சிகள் வேகமாக வெளியேறி வருகின்றன. சிவசேனை, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. பாஜக தலைமையிலான கூட்டணி இப்போது எங்கே உள்ளது என்பதுதான் கேள்விக் குறியாக உள்ளது.
பாஜகவில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்றாா் அவா்.