அடுத்த ஆண்டுமுதல் நாட்டில் அனைத்து கைப்பேசிகளையும் விற்பனை செய்யும் முன், அவற்றின் ஐஎம்இஐ எண் பதிவு செய்யப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதுதொடா்பாக அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை: இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசிகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைப்பேசிகள் என அனைத்து கைப்பேசிகளின் ஐஎம்இஐ (சா்வதேச கைப்பேசி சாதன அடையாள எண்) எண்ணை அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல்
https://icdr.ceir.gov.in வலைதளத்தில் கைப்பேசி தயாரிப்பாளா்கள் கட்டாயம் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த வலைதளம் மத்திய அரசின் தொலைத்தொடா்புத் துறையால் இயக்கப்படுகிறது.
தொலைத்தொடா்பு கட்டமைப்பில் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்ட போலி கைப்பேசி சாதனங்கள் தென்படுவதால், தொலைந்து போகும் கைப்பேசிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, கைப்பேசியை முதல்முறையாக விற்பனை செய்யும் முன், அதன் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கைப்பேசிக்கும் 15 இலக்கங்கள் கொண்ட ஐஎம்இஐ எண் உள்ளது. இது கைப்பேசியின் தனித்துவ அடையாள எண்ணாக உள்ளது.