முகப்பு
இந்தியா

‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
ஐஎன்எஸ் விக்ராந்த்
பகிர்:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ. 20,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

இந்தக் கப்பலில், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள்,  16 படுக்கைகள், பரிசோதனை மையங்கள், சிடி ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம்பெற்றுள்ளது. மருத்துவப் பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்ட இரும்புகளைவிட நான்கு மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கப்பலில் 2,400 கி.மீ. அளவிற்கு நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இது கிட்டத்திட்ட கொச்சியிலிருந்து தில்லி வரையிலான தூரம். ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை  வரும் செப் - 2 ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற உள்ளது என்றும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.