நாளை முழு சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகண நிகழ்வு செவ்வாய்க்கிழமை (நவ.8) நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும்.
முழு சந்திர கிரகண நிகழ்வு செவ்வாய்க்கிழமை (நவ.8) நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும்.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் இருந்து சந்திர கிரகணத்தைக் காண இயலும்.
முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இயலாது. முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காணக் கூடியதாக இருக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னா், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது.
நாகாலாந்தின் கோஹிமாவில் மட்டுமே சந்திர கிரகணத்தின் உச்சநிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம். தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தைக் காண இயலும்.