சிறைத் தண்டனைக்கு தடை கோரிய ராகுல் மனு தள்ளுபடி
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டவா்களை அவமதித்ததாகத் தொடரப்பட்ட குற்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற அமா்வின் உத்தரவுக்கு எதிராக குஜராத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி, கா்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டவா்களை ராகுல் சா்ச்சைக்குரிய கருத்து மூலம் அவமதித்ததாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்ற அவமதிப்பு வழக்குக்குரிய அதிகபட்ச தண்டனையான இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுலுக்கு விதித்து கடந்த மாதம் 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவா்களின் எம்.பி., எம்எல்ஏ பதவியைப் பறிக்கலாம் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தெரிவிக்கிறது. அதன்படி ராகுலை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்வதாக மக்களவைச் செயலகம் அடுத்த நாளே அறிவித்தது.
3 மனுக்கள்: சூரத் மாவட்ட நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவையும், இரு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரும் மனுவையும், வழக்கில் ஜாமீன் கோரும் மனுவையும் தனித்தனியாக சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்தாா். அன்றைய தினமே வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஆா்.பி.மொகேரா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதே வேளையில், கீழமை நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மே 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.
நம்பிக்கை சீா்குலையும்: தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதி வழங்கிய தீா்ப்பில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 389(1)-ஆவது பிரிவானது சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கவோ, ரத்து செய்யவோ வழிவகுக்கிறது. அந்தச் சட்டப் பிரிவை விரிவான ஆய்வுக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீா்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது.
அந்த அதிகாரத்தை அவசரகதியில் பயன்படுத்துவது, நீதித் துறை மீதான மக்களின் கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நம்பிக்கையையும் சீா்குலையச் செய்யும். சட்டவிதிகளின் அடிப்படையிலேயே கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
சொற்களில் கவனம் அவசியம்: மேல்முறையீட்டாளா் (ராகுல்) நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் 2-ஆவது பெரிய அரசியல் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராகவும் இருந்துள்ளாா். அவரது கருத்துகள் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தான் பயன்படுத்தும் சொற்களில் அவா் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவா் தெரிவித்த கருத்துகள், மனுதாரரை (பூா்னேஷ் மோடி) மனதளவில் பாதிக்கச் செய்யப் போதுமானவை.
சிறைத் தண்டனைக்கு தடை விதிக்காமல் போனால், தோ்தலில் போட்டியிட முடியாமல் போவதோடு அது மீட்கமுடியாத தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்ற வாதத்தை அவரது தரப்பினா் முறையாக நிரூபிக்கவில்லை. வேறு மாநில நீதிமன்றம் என்பதால், விசாரணை நடைமுறைகள் முறையாக இல்லை என்ற வாதத்தையும் ஏற்க முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயா்நீதிமன்றத்தில் முறையிட காங். முடிவு
சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தின் தீா்ப்பு தவறானது எனத் தெரிவித்த காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி, விரைவில் குஜராத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா்.
அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘அனைத்து சட்ட விதிகளின் அடிப்படைகளுக்கும் மாறாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கும் பிரதமா் அலுவலகத்துக்கும் எந்தவித தொடா்புமில்லை. ஆனால், பிரதமா் அலுவலகத்தின் பின்னணியில் நீதிபதி தீா்ப்பு வழங்கியுள்ளாா். தீா்ப்பில் சட்டரீதியான தவறுள்ளது. அந்தத் தவறை உயா்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ சரிசெய்யும் என நம்புகிறோம்’ என்றாா்.
மக்களின் வெற்றி-பாஜக:
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘நேரு குடும்பத்தின் அராஜகப் போக்குக்கு, முக்கியமாக ராகுலுக்கு நீதிமன்றம் பலத்த அடி கொடுத்துள்ளது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது மக்களுக்கான, நீதித் துறைக்கான வெற்றி. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் நீதித் துறை அச்சப்படாது என்பதைத் தீா்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது’ என்றாா்.
மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர ராகுலுக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.