பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் வங்கதேச தளபதி சந்திப்பு
இந்திய பாதுகாப்புப் படை உயரதிகாரிகளை வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி எஸ்.எம்.சஃபியுதீன் அகமது சந்தித்துப் பேசினாா்.
இந்திய பாதுகாப்புப் படை உயரதிகாரிகளை வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி எஸ்.எம்.சஃபியுதீன் அகமது சந்தித்துப் பேசினாா்.
இந்தியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச தலைமைத் தளபதி எஸ்.எம்.சஃபியுதீன் அகமது, முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹானை புதன்கிழமை சந்தித்துப் பேசியிருந்தாா். இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் துணைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங், வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா, பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமனே ஆகியோரை அவா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்புகளின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமிக்கு சனிக்கிழமை (ஏப். 29) வருகை தரவுள்ள வங்கதேச தலைமைத் தளபதி, அங்கு நடைபெறும் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொள்கிறாா்.