முகப்பு
இந்தியா

17 வயது சிறுமி மரணத்தைத் தொடா்ந்து வன்முறை: மேற்கு வங்கத்தின் காளியாகஞ்சில் 144 தடை உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் காளியாகஞ்ச் பகுதியில் 17 வயது சிறுமியின் மரணத்தைத் தொடா்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2023 at 8:19 AM
பகிர்:


காளியாகஞ்ச்: மேற்கு வங்க மாநிலம் காளியாகஞ்ச் பகுதியில் 17 வயது சிறுமியின் மரணத்தைத் தொடா்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூா் மாவட்டம் காளியாகஞ்ச் பகுதியில் 17 வயது தலித் சிறுமியின் சடலம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உடற்கூறாய்வு ஆய்வறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக 20 வயது இளைஞா், அவரின் தந்தையை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை காளியாகஞ்சில் சிறுமியின் மரணம் தொடா்பாக பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடி சமூகத்தினா் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் அங்குள்ள காவல் நிலையத்துக்கு ஒரு கும்பல் தீ வைத்து, பணியில் இருந்து போலீஸாரை கடுமையாக தாக்கியது. இதனைத்தொடா்ந்து வன்முறை தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

இந்நிலையில், காளியாகஞ்சில் பொது இடங்களில் 4-க்கும் மேற்பட்டவா்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் 144 தடை உத்தரவை மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை பிறப்பித்தது. அத்துடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின ஆணைய துணைத் தலைவா் சந்திப்பு: காளியாகஞ்சில் சிறுமியின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவா் அருண் ஹல்தா் சந்தித்தாா். இதனைத்தொடா்ந்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவா் கூறுகையில், ‘சிறுமியின் மரணத்தில் உண்மையை மறைக்க முயற்சி நடைபெறுவதாகத் தோன்றுகிறது. காளியாகஞ்ச் சென்றபோது மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை எனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தபோது மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அங்கு வரவில்லை. இதுதொடா்பாக பதிலளிக்க வடக்கு வங்காள காவல் துறை ஐஜி, மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே காவல் துறைக்கு உதவி வந்த மிஜானுா் ரெஹமான் என்ற தன்னாா்வலா் வன்முறையின்போது பலத்த காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.