மழைக்கால கூட்டத்தொடர்: மேலுமொரு ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம்!
ஆவணங்களைக் கிழித்து மக்களவைத் தலைவர் இருக்கையை நோக்கி வீசியதால், சுஷில் குமார் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சுஷில் குமார் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவணங்களைக் கிழித்து மக்களவைத் தலைவர் இருக்கையை நோக்கி வீசியதால், சுஷில் குமார் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாநிலங்களவை மற்றும் மக்களவையிலும் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனால் அவை நடவடிக்கைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இன்று (ஆக. 3) 11வது நாளாக பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியது. தில்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம் தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆவணங்களைக் கிழித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நோக்கி வீசினார்.
இதனைத் தொடர்ந்து மக்களவையிலிருந்து கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து ஓம் பிர்லா உத்தரவிட்டார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.