மணிப்பூர் கலவரம்: 3 பேர் சுட்டுக் கொலை; வீடுகள் எரிப்பு!
கலவரக்காரர்கள் கூகி சமூகத்தைச் சேர்ந்த வீடுகள் தீயிட்டு எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின.
மணிப்பூரின் பிஷ்னுபூர் பகுதியில் இன்று (ஆக. 5) காலை ஏற்பட்ட கலவரத்தில் மைதேயி இனத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கூகி பழங்குடியினரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த இரு சமூகத்தினரிடையேயும் மோதல் போக்கு நிடித்து வருவதால், மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மைதேயி சமூகத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் பேசும் நபர்கள் மீது மணிப்பூரில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
Advertisement
சமீபத்தில் கூகி பழங்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், பிஷ்னுபூர் மாவட்டத்திலுள்ள க்வாதா பகுதியில் நேற்று இரவு திடீரென கலவரம் ஏற்பட்டது. க்வாதாவில் பைதேயி சமூகத்தினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால், இந்த கலவரம் ஏற்பட்டதாக மணிப்பூரிலுள்ள ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலவரக்காரர்கள் கூகி சமூகத்தைச் சேர்ந்த வீடுகள் தீயிட்டு எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின.
கலவரம் ஏற்பட்ட இடத்தில் காவல் துறையினரும் ஆயுதமேந்திய வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.