பிரதமர் நரேந்திர மோடியையும், சந்திரயான் - 3 திட்டக் குழுவையும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் புகழ்ந்து பேசியுள்ளார்.
சந்திரயான் - 3 வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சூரியன் மற்றும் வெள்ளி கோளை ஆய்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டால்... இவ்வளவு நன்மைகளா?
அப்போது அவர் பேசியதாவது: சந்திரயான் -3 வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றன. சந்திரயான் - 3 வெற்றி நமது நாட்டின் திறனையும், இளைஞர்களின் திறனையும் காட்டுகிறது. இந்த சாதனை புதிய இந்தியாவின் அடையாளம். இது வெற்றியின் முதல் அடி. இந்த சாதனையின் பின்னணியில் நமது விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நமது விஞ்ஞானிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார். முதலில் மங்கள்யான், பிறகு சந்திரயான் தற்போது சூரியன் மற்றும் வெள்ளிக்கு (கோள்) விண்கலம் அனுப்பி ஆராய்ச்சி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
நிலவில் சந்திரயான் - 3 தடம் பதித்த நாளான ஆகஸ்ட் 23 ஆண்டுதோறும் தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.