பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி!
பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹுவுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் மதுபான ஆலையில் ரூ.351 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்த விடியோ ஒன்றை பாஜக, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்டும் காட்சிகளும், காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.
Advertisement
இந்த விடியோவைப் பகிர்ந்த பிரதமர் மோடி, “இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி ஹெய்ஸ்ட் (இணைய தொடர்) போன்ற புனைவுகளுககு அவசியமில்லை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையர்களாகத் தொடர்ந்துவரும் முன்னோடிகள் இவர்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “1947க்குப் பிறகு நடந்த மிகப் பெரிய கொள்ளையை நீங்கள் விளக்க வேண்டும் என்று தேசம் விரும்புகிறது.
உங்கள் நெருங்கிய நண்பரான அதானி, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் மின் சாதனங்களின் விலையை உயர்த்தி, இந்தியாவிலிருந்து 17,500 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள செயல்படாத ஷெல் நிறுவனங்களின் மூலம் 20,000 கோடி ரூபாயை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டவிரோதமாக தனது பங்கு விலைகளை உயர்த்துகிறார். அவருக்கு வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடனாக கொடுக்கப்படுகிறது. .
எங்கோ இருந்த அவர் தற்போது உலகின் இரண்டாவது பணக்காரர் வரை உயர்ந்துள்ளார். இந்த முன்னோடியில்லாத வளர்ச்சிக்கு எல்லாம் யார் பணம் கொடுக்கிறார்கள்?
இதையும் படிக்க | அமித் ஷா-க்கு வரலாறு தெரியாது: ராகுல் காந்தி விமர்சனம்
சமீபத்திய சாங் சுங்-லிங் மற்றும் அதானி குழும விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப நீங்கள் எவ்வளவு முயற்சிக்கிறீர்கள் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அது நடக்காது.” என்று தெரிவித்துள்ளார்.