போபால்: மத்தியப் பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவை நேரில் சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வாழ்த்து தெரிவித்தார்.
230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், 163 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
அந்த மாநில முதல்வராக பாஜகவின் சிவராஜ் சிங் செளகான் பல ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த நிலையில், இம்முறை முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், நாளை பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், மோகன் யாதவின் வீட்டுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், “அவருக்கு வாழ்த்து தெரிவித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுப்பதாக உறுதியளித்தேன். எதிர்க்கட்சியாக, மத்தியப் பிரதேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவோம்.” என்று தெரிவித்தார்.