புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து நிறப் புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், மூளையாக இருந்து செயல்பட்டவர் தலைமறைவாக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மக்களவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து, உறுப்பினர்கள் அமரும் இருக்கை மீது குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என கோஷமெழுப்பியபடி வண்ண புகைக் குப்பியை வீசி களேபரத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே நீலம் (42), அமோல் (25) இருவரும் இதேப்போன்று வண்ண புகைக் குப்பிகளை வைத்து முழக்கமிட்டபடி கைதாகினர்.
இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக நட்பில் இருப்பதாகவும், கடந்த 10ஆம் தேதி இவர்கள் தில்லி வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முகநூல் மூலம் பழக்கமாகியிருக்கிறது.
மைசூருவைச் சேர்ந்த மனோரஞ்சன் பொறியியல் பட்டதாரி, லக்னௌவைச் சேர்ந்த சாகர் ஷர்மா ஓட்டுநர். இருவரும் மக்களவைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியே, ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டவர் தலைமறைவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.