மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த வயதானப் பெண் ஒருவர் தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட இலவசப் பொருட்களை வாங்க மறுத்து திருப்பிக் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
60 தொகுதிகள் கொண்ட மேகாலாயா சட்டப்பேரவைக்கானத் தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. மேகாலாயா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட இலவசப் பொருட்களை வயதானப் பெண்மனி ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பியுரிட்டி பவா என்ற வயதானப் பெண் என்பவரே இந்த இலவசப் பொருட்களை திருப்பியளித்துள்ளார். அவர் மகளிர் அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்து வருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கு சில்லாங் பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களிடம் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசப் பொருட்களை கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: விஜய் 67 - படத்தின் பெயர் இதுவா?
இந்த சம்பவம் குறித்து பியுரிட்டி பவா கூறியதாவது: இந்த இலவசப் பொருட்களை நான் வீட்டில் இல்லாதபோது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்துள்ளார்கள். நான் வீட்டிற்கு திரும்பியபோது எனது மகள், வேட்பாளர்கள் குக்கர் மற்றும் கிண்ணங்கள் போன்ற பொருட்களை பரிசாக அனுப்பியுள்ளதாகக் கூறினார். நான் அந்தப் பொருட்களை அவர்களிடமே திருப்பி அளித்துவிட்டேன். எங்களுக்கு எந்த ஒரு இலவசப் பொருட்களையும் எந்த கட்சியினரும் அனுப்ப வேண்டாம். எங்களுக்கு நல்ல சட்டங்களை இயற்றும் உறுப்பினர்கள் தான் வேண்டும். இலவசங்களை அன்பளிப்பாக அனுப்பி வைப்பவர்கள் அல்ல என்றார்.