10 கி.மீ.க்கு காரில் இழுத்துச்செல்லப்பட்ட நபர்: உ.பி.யில் மற்றொரு கொடூரம்!
உத்தரப் பிரதேசத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நபர் ஒருவர் காரில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நபர் ஒருவர் காரில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தில்லியில் கடந்த ஜனவரி மாதம் இளம்பெண் காரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இன்று காலை சென்றுகொண்டிருந்த காரின் அடிப்படிகுதியில் சிக்கியவாறு நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படுவது கண்டறியப்பட்டது.
தில்லியைச் சேர்ந்த விரேந்தர் சிங் என்பவர் இன்று அதிகாலை ஆக்ராவிலிருந்து நொய்டா வரை காரில் வந்துள்ளார். மதுரா அருகே வரும்போது காரில் ஒருவர் சிக்கி இழுத்துச்செல்லப்படுவதை இரவு நேரக் காவலர் ஒருவர் கண்டு காரை நிறுத்தியுள்ளார்.
Advertisement
அதன் பிறகே காரின் பின்புறம் ஒருவர் இழுத்துச்செல்லப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் விரேந்தர் சிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பனிமூட்டம் அதிகம் இருந்ததால், காரில் சிக்கியது தெரியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
காரில் சிக்கிய நபர் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால், வேறு வாகனத்தில் அடிபட்டு அவர் சாலையில் கிடந்துள்ளார் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
தில்லியில் அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம் பெண் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் அரங்கேறிய நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்தில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.