'வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட இடைக்காலத் தடை'
வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட இடைக்கால தடை: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள வீரப்பன் குறித்த ஆங்கில நூலை வெளியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பெங்களூரில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் புதன்கிழமை (பிப்.22) பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள வீரப்பன் குறித்து ஆங்கில நூலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த புத்தகத்தில் தன்னிடம் கருத்துக்கள் பெறாமல், தன்னைப்பற்றி இந்த புத்தகத்தில் பல பதிவுகள் உள்ளதாகவும், அந்த பதிவுகள் அவதூறு கருத்துகளாக இருக்கலாம் என்பதால் தன்னிடம் புத்தகத்தின் பிரதியை கொடுத்து ஒப்புதல் பெறாமல் இந்த புத்தகத்தை வெளியிட கூடாது என்று நக்கீரன் தலைமை ஆசிரியர் கோபால் சார்பில் பெங்களூரு இரண்டாம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த மனு மீது செவ்வாய்க் கிழமை நீதிபதி சீனிவாசன் முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது நக்கீரன் கோபால் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் நடேசன், நக்கீரன் கோபாலிடம் அனுமதி பெறாமல் இந்த புத்தகத்தை வெளியிட கூடாது.
ஆகையால் இந்த புத்தக வெளியீட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நக்கீரன் கோபால் தரப்பு வழக்குரைஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சீனிவாசன், வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை மதித்து நக்கீரன் கோபாலிடம் அனுமதி பெற்ற பின்பு தான் சிவசுப்பிரமணியன் புத்தகத்தை வெளியிட வேண்டும். தடை உத்தரவை மீறி புத்தகம் வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்குரைஞர் நடேசன் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.