நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது: பணமதிப்பிழப்பில் மாறுபட்ட தீர்ப்பு!
பணமதிப்பிழப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பணமதிப்பிழப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் பலா் பாதிக்கப்பட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அரசியல்சாசன அமா்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதையும் படிக்க | பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு
இந்நிலையில், பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து நீதிபதி பி.வி.நாகரத்னா வழங்கிய தீர்ப்பில்,
ரிசர்வ் வங்கி சட்ட விதிகளின்படி, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசர சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம்.
நாடாளுமன்றம் என்பது இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.