வெளியில் இருந்து உணவுப் பொருள்கள், தண்ணீர் கொண்டு வருவதைத் தடை செய்ய திரையரங்குகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், 'திரையரங்கில் உணவு, பானங்கள் விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமைக்க திரையரங்குகளுக்கு முழு உரிமை உண்டு.
மக்கள் வெளியில் இருந்து உணவு, பானங்கள் கொண்டு வருவதற்கு திரையரங்குகள் தடை விதிக்கலாம். அதேநேரத்தில் தியேட்ரில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும், குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களை அனுமதிக்கலாம்.
அதுபோல பார்வையாளர்களும் திரையரங்குகளுக்குள் உணவுகளை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.