முகப்பு
இந்தியா

கேரளத்தில் குழிமந்தியை சாப்பிட்ட 19 வயது இளம்பெண் பலி: கடந்த ஐந்து நாட்களில் 2ஆவது நிகழ்வு

குழிமந்தியை சாப்பிட்ட 19 வயது இளம்பெண் பலியான சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

குழிமந்தியை சாப்பிட்ட 19 வயது இளம்பெண் பலியான சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி(19). இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் குழிமந்தியை ஆர்டர் செய்திருக்கிறார். பின்னர் அந்த உணவை தனது சகோதரர் உட்பட 4 பேருடன் இணைந்து புத்தாண்டு தினத்தன்று உட்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து அஞ்சுஸ்ரீயின் சகோதரரைத் தவிர மற்ற 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 3 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில், அஞ்சுஸ்ரீயின் உடல்நிலை மோசமானதால் வெள்ளிக்கிழமை காலை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அஞ்சுஸ்ரீ பலியானார். இதையடுத்து அவரது சடலம் காசர்கோடு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து பரியாரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேல்பரம்ப காவல் நிலையத்தில் அஞ்சுஸ்ரீ குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே காசர்கோடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.  உணவு விஷம் காரணமாக கடந்த ஐந்து நாட்களில் மாநிலத்தில் நிகழும் இரண்டாவது மரணம் இதுவாகும். முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி கோட்டயத்தில் குழிமந்தி மற்றும் அல்ஃபாமா ஆகியவற்றை உட்கொண்ட 33 வயதான செவிலியர் ரெஸ்மி பலியானார். அதே உணவகத்தில் இருந்து இந்த உணவுகளை உட்கொண்ட சுமார் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →