காங்கிரஸிலிருந்து விலகினார் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோனி இன்று கட்சியிலிருந்து விலகினார்.
திருவனந்தபுரம்: பிபிசியின் கருத்தை ஆதரிப்பது நாட்டின் இறையாண்மையைக் குலைக்கச் செய்வதாகும் என்று கூறியிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோனி இன்று கட்சியிலிருந்து விலகினார்.
அவர் தனது ராஜிநாமா கடிதத்தில், நேற்று பிபிசி ஆவணப் படத்துக்கு எதிராக தான் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்கு எதிராக தாங்க முடியாத அளவுக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் எனது பொறுப்புகளிலிருந்து விலகுகிறேன். எனது டிவிட்டர் பதிவை நீக்குமாறு எண்ணற்ற அழைப்புகள். அனைத்தையும் நிராகரித்துவிட்டேன் என்று தனது ராஜினாமா கடிதத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனில். நேற்று நடந்த நிகழ்வின் அடிப்படையில் பார்த்தால், கட்சியிலிருந்து விலகுவதற்கு சரியான நேரம் என்றே தோன்றுகிறது. இதனால் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி தொடா்பான சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம், கேரளத்தின் பல இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்புகளால் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.
இதையும் படிக்க.. மோடி மீதான கேள்வி: பிபிசியின் 2-வது ஆவணப்படம் வெளியீடு
இதைக் கண்டித்து, பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப் படம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்க மனநிலையை பிரதிபலிப்பதாக கூறியது. மேலும், ஆவணப்படத்தின் இணைப்புகளை பகிரும் யூடியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்தது. இதனை, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற எதிா்க்கட்சிகள் விமா்சித்திருந்தன.