தவறான வகையில் சிக்னல் வழங்கப்பட்டதே அண்மையில் ஒடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு முக்கியக் காரணம் என உயர்நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்தான விசாரணை அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிக்னல் இணைப்பில் மேற்கொள்பட்ட மாற்றத்தின்போது நிகழ்ந்த குறைபாடுகளே இந்த விபத்துக்கு காரணமாகும்.
சிக்னல் மற்றும் தகவல்தொடர்பு துறையின் பல்வேறு நிலைகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளன. பாஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் இரு இணையான ரயில் பாதைகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சிக்னல் ஸ்விட்ச்களில் தொடர்ந்து காணப்பட்ட அசாதாரண செயல்பாட்டை ரயில் நிலைய அதிகாரி சிக்னல் மற்றும் தகவல்தொடர்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.
இதையடுத்து ரயில் பாதை மேற்பார்வையாளர்கள் குழு அளவிலும் மேற்கொள்ள வேண்டிய பணியில் தவறுகள் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
இதே போன்ற தவறு கடந்த ஆண்டு தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கரக்பூர் கோட்டத்தில் உள்ள பாங்க்ரநயாபாஸ் ரயில் நிலையத்திலும் நடைபெற்றது. இதையடுத்து உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், பாஹாநகா பஜார் ரயில் நிலைய விபத்து ஏற்பட்டிருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.