கடத்தப்பட்ட கலைப் பொருள்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 105 இந்திய பாரம்பரிய பழங்காலப் பொருள்களை அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 105 இந்திய பாரம்பரிய பழங்காலப் பொருள்களை அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தொல்பொருள்களாகக் கருதப்படும் இந்தப் பழங்காலப் பொருள்களில் தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தர், நடராஜர் வெண்கலச் சிலைகளும் அடங்கும்.
இந்தியப் பாரம்பரியம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடத்தப்பட்ட 105 கலைப்பொருள்கள் அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டன. கி.பி. 2 -ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு கால இந்தப் பொருள்கள் திரும்ப ஒப்படைக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பகிர்ந்து கொண்டார்.
தற்போது இந்தப் பொருள்களை அமெரிக்க அட்டர்னி அலுவலகம், உள்நாட்டுப் பாதுகாப்பு முகமைகள் ஆகியன இணைந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் திரும்ப ஒப்படைத்துள்ளன. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்தது.
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 105 பழங்காலப் பொருள்கள் விரைவில் நாடு திரும்புகின்றன. பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு முறை அமெரிக்கப் பயணத்தின் தொடர்ச்சியாக இவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவை கி.பி 2 -ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவை. மேலும், குறிப்பிடத்தக்க கலாசாரம் மட்டுமல்லாமல், மத ரீதியான பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 12-13-ஆம் நூற்றாண்டு பளிங்கு வளைவு, மத்திய இந்தியாவின் 14-15-ஆம் நூற்றாண்டு காலத்திய அப்சரா (காந்தர்வா), தமிழகத்தைச் சேர்ந்த 14-15-ஆம் நூற்றாண்டு சம்பந்தர், வெண்கல நடராஜர் ( 17-18-ஆம் நூற்றாண்டு) உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்பட்ட 105 கலைப் பொருள்களைத் திரும்ப ஒப்படைத்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிட்டது.
இந்தப் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இது ஒவ்வோர் இந்தியரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும். இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி. இந்த விலைமதிப்பற்ற கலைப் பொருள்கள் மகத்தான கலாசாரம் மற்றும் மத ரீதியான சிறப்பு கொண்டவை. இவை மீண்டும் நாடு திரும்புவது நமது பாரம்பரியம் மற்றும் வளமான வரலாற்றைப் பாதுகாக்கும், நமது உறுதிபாட்டுக்கு அத்தாட்சி' என தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட இந்த 105 பழங்காலப் பொருள்களில் 50 மத ரீதியானவை (ஹிந்து, இஸ்லாம், ஜைனம்). இதில் 27 தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்தவை. அமெரிக்கா இதுவரை 278 புராதன கலைப்பொருள்களை திரும்ப ஒப்படைத்துள்ளது. இவை பிரதமர் மோடி அமெரிக்கா (மூன்று முறை) சென்ற போது ஒப்படைக்கப்பட்டவை.
மேலும், 1,000 இந்திய கலைப்பொக்கிஷங்கள் அமெரிக்காவில் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர் எனவும் வெளியுறவுத் துறை சார்பில் கூறப்பட்டது.
சூரத் நகர் வைரம்: பிரதமர் மோடியின் மற்றொரு ட்விட்டர் பதிவில் சூரத் நகரின் வைரத் தொழில்துறையின் வளர்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார். அதில் பிரதமர் கூறியிருப்பதாவது: வைரத் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வலிமையை சூரத் வைர மையம் எடுத்துக்காட்டுகிறது.
இது நாட்டின் தொழில் முனைவு உத்வேகத்திற்கான அத்தாட்சியாகும். வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் ஒருங்கிணைப்புகளுக்கான கேந்திரமாக செயல்பட்டு நமது பொருளாதாரத்துக்கு மேலும் ஊக்கம் அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.