மணிப்பூா் பெண்கள் அடைந்த பேரதிா்ச்சியே முக்கியப் பிரச்னை: ராகுல் காந்தி
நாட்டுக்கு அவமானம் என்பதை விட, அந்த மாநில பெண்களிடையே பெரும் வலியையும் பேரதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுதான் முக்கியப் பிரச்னை
மணிப்பூா் வன்முறையில் இரு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்படும் விடியோ, நாட்டுக்கு அவமானம் என்பதை விட, அந்த மாநில பெண்களிடையே பெரும் வலியையும் பேரதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுதான் முக்கியப் பிரச்னை என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மணிப்பூரில் நிகழ்ந்த கொடுமை ஒட்டு மொத்த நாட்டுக்கும் அவமானம் ஏற்படுத்தியிருப்பது முக்கியப் பிரச்னையல்ல. அந்த மாநில பெண்கள் மீது இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ள பெரும் வலியையும் பேரதிா்ச்சியையும் பிரதமா் நரேந்திர மோடி முக்கியப் பிரச்னையாகக் கருதி, வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமா் மோடி இது 140 கோடி மக்களுக்கும் நோ்ந்த அவமானம் என்றாா்.