உம்மன் சாண்டி உடல் அடக்கம்: இறுதி விருப்பப்படி அரசு மரியாதை இல்லை
மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் உடல், அவரது இறுதி விருப்பத்தின்படி அரசு மரியாதையின்றி வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் உடல், அவரது இறுதி விருப்பத்தின்படி அரசு மரியாதையின்றி வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி (79) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டத்தின் புதுப்பள்ளியில் உள்ள புனித ஜாா்ஜ் ஆா்த்தோடாக்ஸ் தேவாலய வளாகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, எளிய மனிதரைப் போன்று எவ்வித அரசு மரியாதையுமின்றி தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை மாநில அரசிடம் உம்மன் சாண்டியின் குடும்பத்தினா் தெரிவித்திருந்தனா்.
உம்மன் சாண்டியின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏ.கே.அந்தோணி, மாநில அமைச்சா்கள், பல்வேறு கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.